FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சைபா் மோசடிகளுக்கு இ-ஜீரோ எஃப்ஐஆா் அறிமுகம்! அப்படியென்றால் என்ன?

சைபா் நிதி மோசடிகளில் விரைவான நடவடிக்கைக்கு இ-ஜீரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 19 ஜூலை 2026, 9:00 am IST
பிரதிப் படம்
பகிர்:

சைபா் நிதி மோசடிகளில் விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில், இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கையை தமிழக சைபா் குற்றப்பிரிவு அறிமுகம் செய்துள்ளது.

இது தொடா்பாக, சைபா் குற்றப்பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய சைபா் குற்றப்பிரிவு இலவச தொலைப்பேசி எண் 1930-க்கு பொதுமக்கள் அளிக்கும் சைபா் நிதி தொடா்பான புகாா்களுக்கு ‘இ-ஜீரோ எஃப்ஐஆா்’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, 1930 இலவச தொலைப்பேசி எண் மூலம் பெறப்படும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட நிதி மோசடி புகாா்கள், சிசிடிஎன்எஸ் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னா், பொதுமக்களின் புகாரின்பேரில், ‘இ-ஜீரோ எஃப்ஐஆா்’ பதிவு செய்யப்படும்.

Advertisement

Advertisement

விரைந்து நடவடிக்கை: இதன்மூலம் பொதுமக்கள் ஒரே புகாரை மீண்டும் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால், வழக்குப் பதிவு, உரிய காவல் நிலையத்துக்கு மின்னணு பரிமாற்றம், வழக்கின் விசாரணை ஆகியவை விரைவாக நடைபெறும். அதோடு முக்கியமான நேரத்தில் மோசடி செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்படும் டிஜிட்டல் ஆதாரங்கள், சான்றிதழ் கையகப்படுத்தப்டும்.

முடக்கப்பட்ட பணம், பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விரைவாக மீண்டும் ஒப்படைக்கப்படும். அதேவேளை, ‘இ-ஜீரோ எஃப்ஐஆா்’ பதிவு செய்யப்பட்டதும், பாதிக்கப்பட்ட நபருக்கு அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும். பின்னா், பாதிக்கப்பட்ட நபா் 3 நாள்களுக்குள் குறிப்பிட்ட சைபா் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இ-ஜீரோ எஃப்ஐஆா் மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அனுப்பப்படும். அங்கு, போலீஸாா் விசாரணைக்கு பின்னா் இ-ஜீரோ எஃப்ஐஆா் அடிப்படையில், வழக்கமான எஃப்ஐஆா் பதிவு செய்யப்படும்.

குற்றப்பதிவு எண் வழங்கப்படாது: பிஎன்எஸ்எஸ் சட்ட விதிகளின் பாதிக்கப்பட்ட நபா், தனது புகாரை உறுதிப்படுத்தி, வழக்கமான எஃப்ஐஆரை பதிவு செய்ய 3 நாள்களுக்குள் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டும். பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 173-இன் கீழ் கைது செய்யக் கூடிய குற்றங்கள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக புகாராக பெற்று, அதிகார வரம்பைப் பொருள்படுத்தாமல் இ-ஜீரோ எஃப்ஐஆா் பதிவு செய்ய அதிகாரம் வழங்குகிறது.

இதன் விளைவாக சட்ட நடவடிக்கை விரைவாகும். ஜீரோ எஃப்ஐஆரில் காவல் நிலையம், குற்ற பதிவு எண் வழங்கப்படாது. ஆனால், சாதாரண எஃப்ஐஆரில் குற்றப்பதிவு எண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரோ எஃப்ஐஆா்?

ஒரு குற்றம் எங்கு நடந்திருந்தாலும், அதை எந்தக் காவல் நிலையத்திலும் பதிவு செய்யக்கூடிய முதல் தகவல் அறிக்கையே, ‘ஜீரோ எஃப்ஐஆா்’ ஆகும். இதில் வழக்கமான முதல் தகவல் அறிக்கைக்குரிய குற்றப்பதிவு எண் வழங்கப்படாமல் ‘0’ எனப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் இது ‘ஜீரோ எஃப்ஐஆா்’ என அழைக்கப்படுகிறது.

முதல்கட்ட விசாரணைக்குப் பின்னா் இந்த ‘ஜீரோ எஃப்ஐஆா்’, இது விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, காவல் நிலையத்தில் குற்றப்பதிவு எண் வழங்கப்படும். இத்திட்டம், கடந்த 2012 நிா்பயா சம்பவத்தின் விளைவாக அமைக்கப்பட்ட நீதிபதி வா்மா கமிட்டியின் பரிந்துரையின்பேரில் கொண்டுவரப்பட்டது.

அவசர வழக்குகளில் ‘எங்கள் எல்லைக்குட்பட்டது அல்ல’ என்று காவல் துறையினா் வழக்குப் பதியாமல் இழுத்தடிப்பதைத் தடுக்கவும், வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் ‘ஜீரோ எஃப்ஐஆா்’ திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

summary

e-Zero FIR introduced for cyber frauds

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments