தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலரா? மாநிலப் பணிக்கு ராஜேஷ் லக்கானி மாற்றம்!
ராஜேஷ் லக்கானி மாநிலப் பணிக்கு திரும்பியுள்ளது குறித்து...
கடந்த 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு (cadre) ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவோதயா வித்யாலயா சமிதியின் (NVS) ஆணையராக (இணைச் செயலர் அந்தஸ்து) பணியாற்றி வந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தமிழகப் பணிகளுக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவின்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜேஷ் லக்கானியை மீண்டும் தமிழகப் பணிக்குத் திருப்பி அனுப்புவது குறித்த, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜேஷ் லக்கானி பிப்ரவரி 2025-இல் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் மே 31, 2029-ல் பணி ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் (இணைச் செயலர் அந்தஸ்து) நீடிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவரின் மத்தியப் பணி பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவரது சொந்த மாநிலமான தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
Advertisement
Advertisement
தற்போதைய தலைமைச் செயலாளர் எம். சாய் குமார், வரும் பிப்ரவரி 28, 2027 அன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், லக்கானியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பிரிவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் லக்கானி, அடுத்த தலைமைச் செயலராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட லக்கானி, 1992-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். தமிழகத்தில் தனது பதவிக்காலத்தில், நகராட்சி நிர்வாக ஆணையர், சுற்றுலாத் துறை செயலர் மற்றும் 2016 முதல் 2018 வரை தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகிய பொறுப்புகளை லக்கானி வகித்துள்ளார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலராகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ராஜேஷ் லக்கானி, பிப்ரவரி 2025-இல் மத்திய அரசுப் பணிக்குச் செல்வதற்கு முன்பு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தார்.
ராஜேஷ் லாக்கானியின் தமிழகம் வருகை, மாநில நிர்வாகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பலத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Senior IAS officer Rajesh Lakhani of the 1992 Tamil Nadu cadre has been prematurely repatriated from his post as Commissioner (Joint Secretary level) of the Navodaya Vidyalaya Samiti (NVS) under the Union Ministry of Education.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.