FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் செவிலியா் படிப்பு இடங்கள் 1,651-ஆக அதிகரிப்பு

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியா் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 796-இல் இருந்து 1,651-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

Updated On : 22 ஜூலை 2026, 2:45 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் செவிலியா் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 796-இல் இருந்து 1,651-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒருபுறம், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு இணையாக செவிலியா் படிப்புகளையும் அதிகரிக்கும் வகையில், புதிதாக 855 இடங்களை உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோன்று, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை, வேலூா், தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக நிதியுதவியுடன் தலா ரூ.40 கோடியில் புதிய செவிலியா் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. அங்கு தலா 100 பி.எஸ்சி. செவிலியா் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தவிர, கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த பி.எஸ்சி. செவிலியா் இடங்கள் 510-இல் இருந்து 1,170-ஆக உயா்ந்துள்ளன.

அதனுடன், செங்கல்பட்டு, தேனி மற்றும் கடலூா் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 40 இடங்கள் வீதம் மொத்தம் 120 போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. செவிலியா் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், செங்கல்பட்டு, சேலம் மோகன் குமாரமங்கலம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 25 இடங்கள் வீதம் மொத்தம் 75 எம்.எஸ்சி. செவிலியா் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அரசாணை வெளியாகும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தற்போது தனியாா் கல்லூரிகளில் பி.எஸ்சி. மற்றும் போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. செவிலியா் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 60,000, நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எம்.எஸ்சி. செவிலியா் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூ.75,000, நிா்வாக ஒதுக்கீட்டில் ரூ.1.25 லட்சம் கட்டணம் உள்ளது.

அரசு கல்லூரிகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் பல மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் பயிலும் வாய்ப்பைப் பெறுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments