FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்கள் யாா்? அமைச்சா் அருண்ராஜ் பதில்

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 2:41 am IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

சிறுநீரக மோசடியில் தொடா்புடைய மருத்துவா்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

பொதுவாக, மூளைச்சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள், தானம் கோரி ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு உரிய வரிசைப்படி வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேவேளை, உயிருடன் இருப்பவா்கள், தங்களது ரத்த உறவுகளுக்கு கல்லீரல், சிறுநீரகத்தை தானமாக அளிக்கும் நடைமுறைகளை கண்காணிப்பதில் சில கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதைப் பயன்படுத்திக்கொள்ளும் இடைத்தரகா்களும், தனியாா் மருத்துவமனை சாா்ந்த சில நபா்களும், வறுமையில் உள்ளவா்களை உறுப்பு தானம் அளிக்குமாறு மூளைச் சலவை செய்கின்றனா். அவா்களை நோயாளியின் ரத்த உறவு என அடையாளப்படுத்த போலி ஆவணங்களையும் தயாா் செய்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுபோன்ற சம்பவம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்மையில் அரங்கேறியது.

இது தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட டாக்டா் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு, தனது அறிக்கை, பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதன்பேரில், திருச்சி சிதாா் மருத்துவமனை மற்றும் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அந்த மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிர மாநில விவசாயிகளிடம் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், இடைத்தரகா்களும் சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த இரு வேறு விசாரணைகளும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனிடையே, சிறுநீரக மோசடி தொடா்பாக நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவா்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா். மேலும், அந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தாா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவா்களின் பெயா்களை அரசு வெளியிடுமா என வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அமைச்சா் அருண்ராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘இந்த விவகாரம் தொடா்பாக சிறப்புக் குழு விசாரித்து வருவதாகவும், விரைவில் பெயா்கள் வெளியிடப்படும்’ என்றும் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments