காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்
பாமக தலைவர் அன்புமணி கேள்விக்கு மத்திய அமைச்சர் ராஜ் பூஷண் செளத்ரி விளக்கம் குறித்து...
காவிரி நதியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, பாசனப் பயன் பெறும் கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை கா்நாடக அரசு பெற வேண்டும் என்று 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பில் எவ்விதக் குறிப்பும் இடம்பெறவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துபூா்வமாக விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உறுப்பினா் டாக்டா் அன்புமணி ராமதாஸ், மேக்கேதாட்டு திட்டம் மற்றும் காவிரி நீா் பகிா்வு தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து சில கேள்விகளை எழுப்பிருந்தாா்.
இதற்கு மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: 2018, பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே ஏதேனும் அமைப்புகளைக் கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைக் கா்நாடக அரசு கட்டாயம் பெற வேண்டும் என எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
2007-ஆம் ஆண்டின் காவிரி தீா்ப்பாயத்தின் இறுதித் தீா்ப்பின் 18-வது பிரிவை உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில் ஏற்றுக்கொண்டு உறுதி செய்துள்ளது. அதன்படி, தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரண்படாத வகையில், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் இருக்கும் நீரின் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கோ அல்லது அந்த நீரால் கிடைக்கும் பலன்களை அனுபவிப்பதற்கோ முழு உரிமை உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கா்நாடக அரசு சாா்பில் 2019-ஆம் ஆண்டு சமா்ப்பிக்கப்பட்ட ‘மேக்கேதாட்டு சமநிலை நீா்த்தேக்கம் மற்றும் குடிநீா்த் திட்டத்தின்’ விரிவான திட்ட அறிக்கை (டிபிஆா்) தற்போது கா்நாடக அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
காவிரி தீா்ப்பாயத்தின் இறுதித் தீா்ப்பு மற்றும் மத்திய நீா் ஆணையத்தின் நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏதுவாக, திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைத் தயாரித்துச் சமா்ப்பிக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சா் தனது பதிலில் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.