முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!
தென்மேற்குப் பருவமழை பற்றி...
தென்மேற்குப் பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
இந்தாண்டு கத்திரி வெய்யில் திங்கள்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழையானது இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
கேரளம், கர்நாடகம் உள்பட பல மாநிலங்களின் மழை தேவையைப் பூர்த்தி செய்வது தென்மேற்குப் பருவமழை. ஆண்டுதோறும் ஜூன் 1 அல்லது மாதத்தின் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது,
இயல்பாக ஜூன் முதல் வாரத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, மே மாதம் நான்காவது வாரத்திலேயே துவங்க வாய்ப்புள்ளது. ஆனாலும், தமிழகத்தில் இயல்பை விடக் குறைவான அளவே மழை பெய்யலாம்.
அக்டோபர் மாதம் முதல் பசிபிக் பெருங்கடலில் உருவாகும், 'சூப்பர் எல்நினோ' காரணமாக, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையை பொருத்தவரை அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.