பெண்களிடம் வினோத மோசடி! மொட்டை அடித்தால் ரூ. 45 ஆயிரம் பணம்!
மொட்டை அடித்தால் பணம் தருவதாகக் கூறி, பெண்களிடம் மோசடி.
சேலம்: ஆத்தூர் அருகே மொட்டை அடித்தால ரூ. 15 ஆயிரம் தருவதாகக் கூறி, பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்த, பழனியம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து வட்டாட்சியர் பேசுவதாகவும், அந்தப் பெண்ணின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, கரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர்.
Advertisement
Advertisement
அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது. மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, பெண்கள் என்றால் தலா ரூ. 15 ஆயிரம்; பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால் தலா, ரூ. 45 ஆயிரம் மற்றும் மடிக்கணினி; ஆண்களுக்கு தலா ரூ. 6,000 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
புதுகொத்தாம்பாடிக்கு, 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்குகூட தகவல் தெரிவித்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
பணத்துடன் வருவதாகவும், நாங்கள் வருவதற்குள், மொட்டை அடித்து தயார் நிலையில் உள்ளவர்களுக்கு, அதிகாரிகள் பணம் வழங்குவார்கள் எனவும் அதே நபர் கூறியுள்ளார்.
அந்த நபரின் பேச்சை நம்பிய 20 பேர், மொட்டை அடிக்க தயாராகினர். இதில், காவேரி, ராமாயி, சித்ரா ஆகிய மூன்று பேர் மொட்டை அடித்த நிலையில், பணம் தருவதாக கூறிய நபரை, தொடர்பு கொண்டபோது, அவரது போன் ‘ஸ்விட்ச் ஆப்’ ஆக இருந்தது.
அதன்பின்னர்தான், மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. மற்ற நபர்கள், மொட்டை அடிப்பதை தவிர்த்தனர். இதுகுறித்து, ஆத்துார் ஊரக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, புதுகொத்தாம்பாடி பழனியம்மாள் கூறுகையில், ‘ஆத்துார் தாலுகா அலுவலக வட்டாட்சியர் பேசுவதாகவும், புதுவித நோய் தடுக்க, மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். அவ்வாறு இல்லை எனில், அத்தொகையை அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றனர். சந்தேகமிருந்தால் ஏற்கனவே மொட்டை அடித்த நபர்களது புகைப்படங்கள் அனுப்புகிறேன் என்று, பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் மொட்டை அடிக்கும் புகைப்படங்கள், ரூ. 500 நோட்டுகள் என, வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தனர்.
பணம் கொடுப்பதற்கு சேர், டேபிள் போட்டு தயார் நிலையில் வைத்திருங்கள் என்றனர். இவற்றை நம்பி, அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்த நிலையில், அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. உள்ளூர் நபரை வரவழைத்து, மூன்று பேர் மட்டும் மொட்டை போட்டனர். மொட்டை அடிக்கும்படி கூறி, ஏமாற்றிய ஆசாமியை கண்டறிந்து, தமிழக அரசும், போலீஸாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறினார்.
மொட்டை அடித்தால் பணம் கிடைக்கும் என்று, மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுபோன்று, தமிழக அரசு பெயரை கூறி புதுவிதமான முறையில் பெண்களை குறிவைத்து மோசடி செய்துள்ள குழுவைக் கண்டறிந்து, போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The police are searching for a man who defrauded women by promising to pay rs. 15,000 if they shaved their heads near Attur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.