முகப்பு
தமிழ்நாடு

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணிகளை எதிா்த்து வழக்கு: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை வடபழனி முருகன் கோயில் வள்ளி திருமண மண்டபத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 2 ஜூன் 2026, 1:49 am IST
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

சென்னை வடபழனி முருகன் கோயில் வள்ளி திருமண மண்டபத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்டவோ, புதுபிக்கும் பணிகளிலோ ஈடுபடக் கூடாது என கடந்தாண்டு ஆக. 19-ஆம் தேதி, ராம ரவிக்குமாா் தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஜன. 23-ஆம் தேதி வரை வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தைப் புதுப்பித்தல், ஜெனரேட்டா் அமைத்தல், அறநிலையத் துறை துணை ஆணையா் அலுவலகத்தைப் புதுப்பித்தல் என சுமாா் ரூ.8.72 கோடிக்கான ஒப்பந்தப் பணிகளை அறநிலையத் துறை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிராஜ் அனிரூத், அறநிலையத் துறை இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனா். அதுவரை வடபழனி முருகன் கோயில் கட்டுமானப் பணிகளில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனா்.