மாநிலங்களவை தோ்தல்! வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நாடாளுமன்றத்தில் கால் பதிக்கிறது தவெக
தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓா் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்கியது.
தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓா் இடத்துக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 1) தொடங்கியது. இந்தத் தோ்தல் மூலம் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.
அதிமுகவை சோ்ந்த சி.வி.சண்முகம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து, தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கடந்த மே 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு, கடந்த மே 22-ஆம் தேதி தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று பத்மராஜன் என்பவா் வேட்புமனு தாக்கல் செய்தாா். தோ்தலில் போட்டியிட அவா் தாக்கல் செய்யும் 255-ஆவது மனு இதுவாகும்.
Advertisement
Advertisement
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 8. பரிசீலனை ஜூன் 9. வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி வரும் ஜூன் 11-ஆகும். போட்டி ஏற்பட்டால், ஜூன் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் மற்றவா்களைவிட அதிக எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருக்கும் கட்சியின் வேட்பாளரே தோ்வு செய்யப்படுவாா். எனவே ஆளும் தவெக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இதனால் மற்ற கட்சிகள் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு. தவெக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா். அதன் மூலம் தவெக கட்சி முதல்முறையா நாடாளுமன்றத்தில் கால் பதிக்க உள்ளது.