தமிழ்நாடு முழுவதும் 7,000 பெட்டோல் நிலையங்கள் திடீர் மூடல்! ஏன்?
தூத்துக்குடியில் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து ஒருநாள் மட்டும் பெட்ரோல் பங்குகள் மூடல்
தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருநாள் மட்டும் விற்பனை நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி பேசியதாவது, "தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் மேற்பார்வையாளராக ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் பெட்ரோல் போடுவதற்காக 4 பேர் பெட்ரோல் நிலையம் வந்தனர்.
அவர்களில் சிலர் பெட்ரோல் நிலையத்தினுள்ளேயே சிறுநீர் கழித்ததையடுத்து, கழிப்பறையைப் பயன்படுத்துமாறு பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அறிவுறுத்திய ஊழியர்களைக் கீழே தள்ளிவிட்டு, அவர்கள் மீதே சிறுநீர் கழித்தனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, அவர்களைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிய சில மணிநேரங்களிலேயே மீண்டும் சுமார் 10 பேருடன் கும்பலாக பயஙகர ஆயுதங்களுடன் வந்தனர். தொடர்ந்து, ஊழியர்களைத் தாக்கவும் முயற்சித்தனர். மேலும், அங்கிருந்த பொருள்களையும் அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர்.
சம்பவ இடத்தில் பெண்களோ குழந்தைகளோ இருந்திருந்தால், அவர்கள் நிலை என்னவாகியிருக்கும்? தாக்குதல் நடத்தியவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை விசாரித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் பெறும்போது, டிவிஆர்-களையும் சேர்த்து போலீஸார் அகற்றியுள்ளனர். இதுபோல் செய்யக் கூடாது எனவும் நாங்கள் வன்மையாகக் கண்டிருக்கிறோம்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அனைவருக்கும் தெரியும்படியாக தமிழ்நாட்டிலுள்ள 7,000 பெட்ரோல் நிலையங்களிலும் ஒருநாள் மட்டும் விற்பனை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கைகளுக்கு அரசின் பதிலைப் பொருத்துதான் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்று தெரிவித்தார்.