திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது பற்றி...
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தீப விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரம் குறித்த வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் கூறியதாவது, "நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். தீபமேற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்கலாமே? உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?
ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்க வேண்டுமென அரசு தரப்பில் கேட்டுக் கொண்டதையடுத்து, மாநில அரசின் இறுதி உத்தரவை ஜூன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டில் கார்த்திகைத் திருநாளையொட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராம. ரவிக்குமாா் என்பவர் மனு தாக்கல் செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபமேற்ற நீதிமன்றம் உத்தவிட்டது. இருந்தபோதிலும், காா்த்திகைத் திருநாளான டிசம்பா் 3 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டதாக ராம. ரவிக்குமார் மீண்டும் மனுத்தாக்கல் செய்த நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதியில் மனுதாரர் ராம. ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து தூணில் தீபமேற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.
தொடர்ந்து, தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்புகோரி, மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.