கேரளத்தில் பருவமழை தொடங்கியது! இனியாவது வெய்யில் குறையுமா?
வெய்யில் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது..
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை இன்று(ஜூன் 4) தொடங்கிய நிலையில், இனிவரும் நாள்களில் வெய்யில் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விவசாயிகளில் முதுகெலும்பாக கருதப்படும் தென்மேற்குப் பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் மாதத்தில் தொடங்குவது வழக்கம். கேரளத்தை மையமாக வைத்து இந்த பருவமழை தொடங்கும்.
அதனடிப்படையில், இந்தாண்டு மே 26-ல் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட, மத்திய பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலைகளுக்கு மத்தியில் பருவமழை தொடங்க இந்தாண்டு தாமதம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கேரளத்தில் தொடங்கியது பருவமழை
இந்த நிலையில், ஜூன் 4 (இன்று) கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
தென்மேற்கு பருவமழை தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்திய மேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளம் - கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்று (4 ஜூன் 2026) முன்னேறியுள்ளது.
அடுத்த ஓரிரு நாள்களில் தமிழ்நாட்டிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என கணித்துள்ளது.
இந்தாண்டு நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாயப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 94 சதவீதம்) வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட (நீண்ட கால சராசரி மழைப்பொழிவில் 92 சதவீதம்) மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும்.
நீண்ட கால சராசரி மழைப்பொழிவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது பற்றாக்குறையாக கருதப்படும்.
வெய்யில் எப்படி இருக்கும்?
தமிழ்நாடு முழுவதும் வெய்யில் தகித்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களில் வெய்யில் சதம் அடித்துள்ளது. இதனால், குழந்தைகள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெய்யில் மே 28 தேதியுடன் நிறைவடைந்தாலும், வெய்யில் குறைந்தபாடில்லை.
கேரளத்தில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக சுட்டெரித்துவந்த வெய்யில் இனிவரும் நாள்களில் குறையவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தோடு ஜூன் மாதத்தில் வெய்யில் அதிகரிக்கும்
மே மாதத்தோடு ஜூன் மாதத்தில் வெப்ப அலைகள் சுட்டெரிக்கும் என கூறப்படுகிறது. அதிகப்படியான வெய்யிலால் வெப்பம் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, வாந்தி, தலைச்சுற்றல், வெப்ப பக்கவாதம் போன்றவை ஏற்படலாம். இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், பிகாா், ஒடிஸா, சத்தீஸ்கா், குஜராத், ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை கணித்துள்ளது.