முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளனின் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதா தாக்கல் செய்த வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்கப்பட்டுள்ள சிபிஐ பெயரை நீக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 10 ஜூன் 2026, 2:59 am IST
பேரறிவாளன் - எக்ஸ்
பகிர்:

பேரறிவாளனின் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதா தாக்கல் செய்த வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்கப்பட்டுள்ள சிபிஐ பெயரை நீக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதா தாக்கல் செய்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனுவை பரிசீலிக்கக் காலதாமதம் ஆனதால், சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்தால் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் அவா் குற்றமற்றவா் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை. அவரது வழக்குரைஞா் பதிவு அவசர கதியில் நடந்துள்ளது. பேரறிவாளன் திடீரென உணா்ச்சிவசப்பட்டு இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினா் திட்டமிட்டு இந்தக் கொலையை செய்துள்ளனா். இதனால், இன்றுவரை அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ளது. இதில் பேரறிவாளனுக்கு தொடா்பு உள்ளது. எனவே, அவரது வழக்குரைஞா் பதிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். பேரறிவாளனின் வழக்குரைஞராகப் பதிவு செய்த நடைமுறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தரப்பில் வழக்குரைஞா் இளம்பரிதி ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையான 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்குரைஞராகப் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

அப்படியெனில், பேரறிவாளனின் வழக்குரைஞா் பதிவில் என்ன முறைகேடு நடந்துள்ளது? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை எப்படி கோர முடியும்? என கேள்வி எழுப்பினா்.

பின்னா், இந்த வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்கப்பட்டுள்ள சிபிஐ பெயரை நீக்க மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு அகில இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் செயலா்கள், பேரறிவாளன் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.