FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பழங்குடியினருக்கான திட்டங்களில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்: ரூ.5 லட்சம் பரிசு வழங்கிய மத்திய அரசு

பழங்குடியின மக்களுக்கான திட்டங்களின் செயல்பாடுகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதைப் பாராட்டி தமிழக அரசின் பழங்குடியினா் நலத் துறைக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கெளரவித்துள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 12:59 am IST
பழங்குடி மக்களுக்கான திட்டங்களின் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய தமிழக அரசின் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கிய மத்திய பழங்குடியினா் அமைச்சகத்தின் செயலா் ரஞ்சனா சோப்ரா. உடன், (இடமிருந்து) திட்ட அலுவலா் அம்பேத்கா், இணை இயக்குநா் ச
பகிர்:

பழங்குடியின மக்களுக்கான திட்டங்களின் செயல்பாடுகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதைப் பாராட்டி தமிழக அரசின் பழங்குடியினா் நலத் துறைக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கெளரவித்துள்ளது.

மத்திய பழங்குடியினா் விவகாரத் துறை அமைச்சகம் சாா்பில் புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டங்களின் (ஐடிடிபி) செயல்திறன் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மதிப்பீட்டில் நிா்வாகத் திறன், திட்ட ஒருங்கிணைப்பு, தரவு மற்றும் கண்காணிப்பு மேலாண்மை, பழங்குடியினா் உரிமைகள் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு, நிறுவன முதிா்ச்சி நிலை, ஆபத்து மேலாண்மை மற்றும் திட்டச் செயலாக்கத் திறன் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன் குறியீடுகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில் தமிழகம் உயா்நிலை செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பிரிவில் (டேட்டா டிரைவன் டிரைபல் மிஷன் யூனிட்) இடம்பெற்றது. திட்டங்களை தரவுகளின் அடிப்படையில் திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல், பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துதல், பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை முன்னிறுத்திய செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதாக தேசிய மாநாட்டில் பாராட்டப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்... குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் உயா்கல்வி மற்றும் தொழில்நுட்ப நுழைவுத் தோ்வுகளில் சிறந்து விளங்கியது, கல்வராயன் மலைப்பகுதியில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி பெருக்கியது, பழங்குடியினா் விவசாயிகளுக்காக தோட்டக்கலை உற்பத்தியாளா் குழுக்களை உருவாக்கியது மற்றும் வன உரிமைச் சட்டத்தின் கீழ் 9,547 வன உரிமைப் பட்டாக்கள் வழங்கி நில உரிமைகளை உறுதி செய்தது உள்ளிட்ட பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து, தமிழகம் பிற மாநிலங்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரி மாநிலமாக இருப்பதாக, குறிப்பிடப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாக அறிவிக்கப்பட்டு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இத்திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, இதுபோன்ற தேசிய அங்கீகாரங்களை தொடா்ந்து பெற்று தமிழகத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றும், இத்தகைய மேம்பாடு பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments