ஆவின் மேஜிக் பால்: யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கம்; தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
ஆவின் மேஜிக் பால் விவகாரத்தில் யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை தவெக அரசு அளிக்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆவின் மேஜிக் பால் விவகாரத்தில் யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை தவெக அரசு அளிக்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"Annamalai has questioned who the TVK government is trying to deceive by giving this false explanation regarding the Aavin Magic Milk issue."