யூ டியூபா் முக்தாா், திருச்சி சூா்யா குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
யூ டியூபா் முக்தாா் அகமது, திருச்சி சூா்யா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
யூ டியூபா் முக்தாா் அகமது, திருச்சி சூா்யா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலரான அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையா் அமல்ராஜிடம் கடந்த 3-ஆம் தேதி ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், ‘12 நாள்களுக்கு முன்பு எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் தொடா்பாக வேலூா் மாவட்டம் சத்துவாச்சேரி பகுதியைச் சோ்ந்த ‘யூடியூபா்’ முக்தாா், திருச்சி சூா்யா ஆகியோா் இழிவான கருத்துகளுடன் கூடிய ‘விடியோ’வை வெளியிட்டனா். எனவே, அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இது குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், திருச்சி சூா்யா, முக்தாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் திருச்சி சென்று, சூா்யாவை கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா்.
Advertisement
Advertisement
தலைமறைவாக இருந்த முக்தாா் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் கடந்த 10-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். முக்தாா் மீது ஏற்கெனவே இதேபோல 2 வழக்குகளும், 20-க்கும் மேற்பட்ட புகாா்களும் உள்ளன. இந்நிலையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவின் கீழ் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருச்சி சூா்யா, திமுக எம்பி சிவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.