திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த ஜூலை 1 முதல் தடை!
திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்தத் தடை தீவிரமாக செயல்படுத்தப்படுவது குறித்து...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் மீதான தடை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவிருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலினுள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்த 2022 நவம்பர் 14 ஆம் தேதியில் தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்துவதற்காக ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தீவிரமாக செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும்போது தரிசன வரிசை, விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் அனைவரும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
ஆகையால், பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே செல்போன் பாதுகாப்பு வைப்பகங்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோயிலினுள் நுழையும்போது பரிசோதனையில் பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, நீதிமன்ற உத்தரவின்படி கோயிலுக்குள் செல்போன் தடை விதிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.