திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்வு? பக்தர்கள் அதிர்ச்சி!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது பற்றி...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அபிஷேகம், தங்கத்தேர் உலா உள்ளிட்டவற்றின் சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து அதுகுறித்து மக்களிடமும் கருத்து கேட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில், விலைவாசி உயர்வு மற்றும் வருவாய் குறைவை ஈடு செய்ய சேவை மற்றும் சிறப்பு தரிசன கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தங்கரத உலா கட்டணம் 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் (வைப்பு நிதி 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாகவும்), சண்முகார்ச்சனை கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், இரண்டு நபர்களுக்கான மூலவர் அபிஷேக கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஒன்பது கால பூஜை கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் (வைப்பு நிதி 20 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரமாகவும்), சாதாரண நாள்களில் 500 ரூபாயும் விழா நாள்களில் 2,000 ரூபாயும் இருந்த அபிஷேக தரிசன கட்டணம், இனி அனைத்து நாள்களிலும் 2,500 ரூபாய் என உயர்த்தப்பட உள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் ஆட்சேபணைகளை ஜூலை 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கோயில் நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு முடிவு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழக மக்கள் கோயில்களை நெருங்கவிடாமல் தடுக்கத் திட்டமிடும் ஜோசப் விஜய் அரசு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சேவைக் கட்டணங்களை ஜோசப் விஜய் அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, கண்டனத்திற்குரியது.
சண்முகார்ச்சனை, ஒன்பது கால பூஜை, அபிஷேக தரிசனக் கட்டணம் என அனைத்து சேவைகளுக்கான கட்டணத்தையும் மூன்று மடங்கு வரை உயர்த்தும் இத்திட்டம் கோயில் வருவாயைப் பெருக்கவா? அல்லது ஏழை எளிய நடுத்தர மக்களை சுப்பிரமணிய சுவாமிக்கு சேவை செய்ய விடாமல் தடுப்பதற்கா?
"கோயில் சொத்துக்கள் கோயிலுக்கே பயன்படுத்தப்படும்" என்று ஆளுநர் உரையில் முழங்கிவிட்டு, இன்று அடித்தட்டு மக்களை கோயில் பக்கமே நெருங்கவிடாதபடி கட்டணத்தை உயர்த்தத் திட்டமிடுவது தான் தூய சக்தியின் உண்மை முகமா?
"அனைவருக்குமான அரசு இது" என்று முதல்வர் கூறுவது உண்மையாக இருந்தால், கோயில்களில் நிலவும் இதுபோன்ற தரிசன மற்றும் சேவைக் கட்டணமுறையை முதலில் கைவிட வேண்டும்! கோயில் வருவாயைப் பெருக்கும் நோக்கில் பக்த கோடிகள் மீது நிதிச் சுமையை ஏற்றாமல், மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
Temple administration decision to hike service charges at the Tiruchendur Murugan Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.