சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார்
சென்னைக்கு 2வது விமான நிலையம் உண்டு ஆனால் அது பரந்தூரில் அல்ல என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும், ஆனால், அது பரந்தூரில் அமையாது என்று எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத் திட்டத்தை எதிர்ப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், மாற்று இடத்தைத் பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் கிராம மக்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையாது என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெளிவுபடுத்தியிருக்கிறார். அத்துடன், 2வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடம் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது முதலே, பரந்தூரில் விமான நிலையம் அமையுமா என்று கேள்விகள் எழுந்த நிலையில், அமைச்சர் ஒருவர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியிருப்பது இதுவே முதல் முறை.
தவெக தலைவர், முதல்வர் விஜய், தேர்தலுக்கு முன்பே, 2வது விமான நிலையத்துக்கு எதிராகப் போராடிய பரந்தூர் கிராம மக்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார். மேம்பாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், பரந்தூரில் விமன நிலையம் அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நீர்நிலைகளையும் அழிப்பதை ஏற்க மாட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேறொரு இடத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், தற்போது தமிழக முதல்வராகியிருக்கும் ஜோசப் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்காமல், மாற்று இடத்தில அமைப்பது குறித்து பரிசீலனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில்தான், அமைச்சர் நிர்மல்குமார், மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் விவசாயிகள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் பாதிக்காமல் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
மேலும், அடுத்த வாரத்தில், மின் துறையின் நிதிநிலை குறித்து விரிவான தகவல்களைக் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Second airport in Parandur? Minister Nirmal Kumar issues a key announcement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.