திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான அம்மோனியா வாயு கசிவு சம்பவம், விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்ததோடு, பல தொழிலாளர்களுக்குக் காயங்களையும் ஏற்படுத்தியிருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
இந்த துயரச் சம்பவத்தில் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான மன வலிமையையும் தைரியத்தையும் வழங்க நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Advertisement
Advertisement
மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த சுமார் 40 பேர் மயக்கம் அடைந்தனர்.
உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தற்போது இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.