தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை! பேரவைத் தலைவர்
தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது பேரவைத் தலைவர் பதில்...
திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை தேவையில்லை என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளி நிகழ்வொன்றில் மேயர் பிரியா, தவெக எம்எல்ஏ பல்லவி பங்கேற்ற நிலையில், விழாவில் தன்னை புறக்கணித்ததாக எம்எல்ஏ பல்லவி கூறினார். விழா நெறிமுறைகளின்படி, தான் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்ததாகவும் எம்எல்ஏ வரும் வரை காத்திருந்து நிகழ்ச்சியைத் தொடங்கியதாகவும் மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.
ஆனால் மேயர் பிரியா மீது தவெக எம்எல்ஏ பல்லவி புகார் கொடுத்தார்.
Advertisement
Advertisement
இந்த புகார் குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று அவையில் விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில்,
"கடந்த 4.6.2026 வியாழக்கிழமை திருவிக நகர் தொகுதிக்குள்பட்ட ஒரு அரசுப்பள்ளி நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றுவது குறித்த மரபு நெறிமுறைகள் மேற்பட்டதாக திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவி ஒரு மனு கொடுத்தார். அதனை நன்கு படித்துப் பார்த்து ஆய்வு செய்தேன். அதுபற்றி சில கருத்துகளை அறிவுறுத்தல்களை வழங்குகிறேன்.
சட்டப்பேரவைக்குரிய கண்ணியத்தையும் மாண்பினையும் அதேபோல சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உண்டான உரிமைகளையும் மரபு நெறிமுறைகளைக் (Protocol) காப்பது எனது கடமையாகும்.
அரசால் வெளியிடப்பட்டுள்ள மரபு நெறிமுறைகளின்படி அரசமைப்புத் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரையுள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வழங்குவது என உருவாக்கப்பட்டது. அதன்படியே அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திருவிக நகர் நிகழ்வில் மரபு நெறிமுறைகள் தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ நடந்த நிகழ்வு. அது இனிவரும் காலங்களில் தொடராது என்று நம்புகிறேன். அதனால் அந்த மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ வேறு நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகளிலும் நடைபெறும் விழாக்களில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய மரபு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதுபற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க அரசு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுகிறேன்" என்று கூறினார்.
No action taken on the petition submitted by TVK MLA Pallavi: TN Assembly Speaker
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.