கவனம் பெறும் திருச்சி திமுக மாநாடு! புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்!
திருச்சியில் நாளை 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக மாநாடு நடைபெறவுள்ளது.
திருச்சியில் நாளை(மார்ச் 9) 10 லட்சம் பேர் பங்கேற்கவுள்ள திமுக மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
2026 பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த மாநாடு திமுகவுக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி சிறுகனூரில் மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ எனும் பெயரிலான திமுக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு அன்றைய நாள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சியும், அப்துல் குத்தூஸ் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க ஸ்டாலின் மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகிறார். பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மேடைக்கு வருகைதரவுள்ளார்.
மாநாட்டு நிகழ்வுகளுக்காக 20 லட்சம் சதுர அடிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமருவதற்கு நாற்காலிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் பேர் நின்று கொண்டு மாநாட்டை பார்வையிடுவதற்காக இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வருவோருக்கு தேவையான குடிநீா், வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே இடத்தில்தான், 5 ஆண்டுகளுக்கு முன்பு 2021-ஆம் ஆண்டு திமுக தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.