தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு?
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு பற்றி...
தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வருகிற மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தேர்தல் விதிமுறைகளின்படி கூட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்காததால் இன்றைய கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பெரம்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கும் தேர்தல் அதிகாரி இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டம் நடத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அதுவும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், காவல்துறை மற்றும் தேவைப்பட்டால் பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் இதுதான் விதிமுறை என்றும் இதுபற்றிய கேள்விக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் பதிலளித்தார்.
அதேநேரத்தில் தவெக சார்பில், இன்னும் சில வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவேண்டியுள்ளதால் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.