டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி: கே.என். நேரு நம்பிக்கை
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளிலும் திமுக வெற்றி என அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திருச்சியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள்.
திமுகவின் வெற்றியில் திருச்சியும் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
மேலும், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், யார் போட்டியிட்டாலும், திமுகவின் வெற்றியை உறுதிசெய்யும் அனைத்து பணிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்" என்றும் கே.என். நேரு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்திலும் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மார்ச் 31 ஆம் தேதிமுதல் திருவாரூரிலிருந்து முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடங்குகிறார்.