முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடும் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூரில் போட்டியிடும் வி.எஸ். பாபு குறித்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
வட சென்னையின் நட்சத்திர தொகுதியான கொளத்தூரில் திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 ஆவது முறையாகப் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 2006-2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் செல்வாக்கு மிக்கப் பொறுப்புகளில் இருந்த விஎ.எஸ். பாபு அதிமுகவில் இருந்து எடப்பாடியின் செயல்பாடுகள் பிடிக்காததால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது தவெக சார்பாக முதல்வரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாம் தமிழர் சார்பில் சௌந்திர பாண்டியன் லூடர் சேத் வரிசையில் தவெக சார்பில் வி.எஸ். பாபுவும் போட்டியிடுகிறார்கள்.
இந்தத் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களில் யார் எவ்வளவு வாக்குகள் பெறுவார்கள் என்பது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர் கரூர் கூட்ட நெரிசல் வழக்கிலும் சிபிஐ விசாரணையில் இருப்பதும் கவனிக்கத்தக்கது.