கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...
சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 30) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களைத் தொடர்ந்து தற்போது 4 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 2026 தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமார் 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன், தவெக சார்பில் வி.எஸ். பாபு போட்டியிடுகிறார்கள்.