விஜய் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்!!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் அளித்துள்ளது பற்றி...
விஜய் பிரசாரத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் புகார் மனு அளித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
முறையாக அனுமதி பெற்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை காவல்துறையினர் உடனடியாக சரி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.