தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோல்வி!
இரு தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது குறித்து...
தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
Advertisement
இதில் ஆளும் திமுக கூட்டணி அரசை பின்னுக்குத்தள்ளி தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் திமுக 56 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இவர் 93,365 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் 54246 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரைராஜிடம் 5989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் 62,060 வாக்குகளைப் பெற்றார்.