இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர்: எஸ்.பி. வேலுமணி பேட்டி! சி.வி. சண்முகம் எங்கே?
இபிஎஸ்தான் எங்கள் பொதுச் செயலர் என்று எஸ்.பி. வேலுமணி கூறியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச் செயலர், எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று அதிமுகவில் உருவான மற்றொரு அணியைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மிக முக்கிய நிகழ்வாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த செய்தியாளர் சந்திப்பு அமைந்துள்ளது.
அதிமுகவில் இபிஎஸ், சிவிஎஸ் என இரண்டு அணியாகப் பிரிந்த நிலையில், பல தகவல்களை சி.வி. சண்முகம்தான் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்து வந்தார். அவர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசி வந்ததோடு, உள்கட்சி விவரங்களை சற்றும் யோசிக்காமல், பின் விளைவுகளை அறியாமல் வெளிப்படுத்தி வந்தார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, சிவிஎஸ் தரப்பு, தவெக அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற கேள்விகள்கூட எழுந்தன. ஆனால் இன்று தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து, அதிமுகவுக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்திருக்கின்றன.
இதனிடையே, செய்தியாளர்களை இன்று சி.வி. சண்முகம் இல்லாமல் சந்தித்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர், குரலை மிகவும் தாழ்த்திப் பேசியிருக்கிறார்கள்.
அதிமுகவில் எந்தவித பிளிவும் இல்லை. சிறிய கருத்து வேறுபாடுதான். மீண்டும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.
கட்சியைப் பிரிப்பதற்காக செயல்படவில்லை. எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் விளைவிக்கின்றனர். முதல்வர் ஜோசப் விஜய் எங்களை சந்தித்தபோது சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அப்போதும் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று கூறவில்லை என பேசியிருப்பதன் மூலம், கடுமையான எதிர்ப்பை எதிரணியினர் குறைத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விமர்சனங்களைக் குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் ஒரு சலசலப்பு ஏற்பட்டு, தற்போது ஓரளவுக்கு அது ஓய்ந்திருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்திக்காமல், எஸ்.பி. வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேச்சுகள் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியிருக்கிறது.