முகப்பு
தமிழ்நாடு

ஜூனில் 9.91 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் மாதத்துக்கான 9.91 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடுவதை உறுதிசெய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 27 மே 2026, 5:11 am IST
பகிர்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் மாதத்துக்கான 9.91 டி.எம்.சி. நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடுவதை உறுதிசெய்ய வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக ஆணையக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

இக்கூட்டம் குறித்து தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: திங்கள்கிழமை (மே 25) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 40.742 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1,003 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது தமிழ்நாடு உறுப்பினர் கூறினார்.

நடப்பு 2025-2026 நீர்பாசன ஆண்டில் கடந்த ஜூன் 1 முதல் நிகழாண்டு மே 24-ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 176.685 டி.எம்.சி.க்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப் பெற்ற நீரின் அளவு 329.166 டி.எம்.சி. ஆகும்.

இதை சுட்டிக்காட்டி, கர்நாடகம் அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அந்த மாநில உறுப்பினர் தெரிவித்தார். இதை, ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், கர்நாடகம் அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தமிழக உறுப்பினர் வலியுறுத்தினார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 26-இல் துவங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்ற கருத்தின்படியும், கர்நாடக அணைகளின் நீர் வரத்தைக் கருத்தில் கொண்டும் தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பிலிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை தமிழ்நாடு உறுப்பினர் வலியுறுத்தினார் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.