உச்ச நீதிமன்ற நீதிபதியாக கோவைத் தமிழ்ப் பெண்மணி! யார் இந்த வழக்குரைஞர் மோகனா?
கோவையில் வழக்குரைஞராகத் தொடங்கித் தில்லியில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவிருக்கும் தமிழ்ப் பெண் வி. மோகனா பற்றி...
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞருமான வி. மோகனா, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடினமான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த உயரத்தை எட்டியுள்ளார் மோகனா.
சட்டப் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்த முதல் தலைமுறை வழக்குரைஞரான வி. மோகனா, 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பின் முதல் அணியில் படித்து வெளிவந்தவர்.
1988-ல் கோவை சட்டக் கல்லூரியில் (தற்போதைய அரசு சட்டக் கல்லூரி) வி. மோகனா, பட்டம் பெற்றார்.
Advertisement
Advertisement
வரையறுக்கப்பட்ட வசதிகள், சில வகுப்பறைகள், குறைந்த அளவே மாணவிகள் என்றிருந்த போதிலும்கூட, கல்வி, விவாதங்கள், நாடகங்களிலும் மோகனா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடுமையான நேர விதிகள்கொண்ட பெண்கள் விடுதியில் இருந்தபோதும்கூட, தனிவகுப்புகள் நடத்தியதன் மூலம் மோகனா தனது படிப்பைத் தொடர்ந்தார்.
இன்றைய பயிற்சிக் கல்வியைப்போல (Internship - இன்டர்ன்ஷிப்) அல்லாமல், கோவையில் புகழ்பெற்ற சிவில் வழக்குரைஞர் எம். பஞ்சாபகேசனிடம் மோகனா பயிற்சி பெற்றார். இங்குதான் வழக்குக் குறிப்புகள், வாதங்களைத் திட்டமிடுதல், நீதிமன்ற விசாரணைகளை நேரடியாகக் கவனிப்பது உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படைகளை மோகனா கற்றுக்கொண்டார். இதுவே அவரின் சட்டப் பணி வாழ்க்கையின் அடித்தளமாக அமைந்திருக்கிறது.
கடுமையான உழைப்பாளியான மோகனா, ஆண்கள் மிகுந்திருந்த அன்றைய காலகட்ட நீதிமன்றங்களில் பெரிதும் பேசப்பட்டார்.
1992-ல் புது தில்லிக்குச் சென்று வழக்குரைஞர் பணியைத் தொடர்ந்தார். இந்த இட மாற்றம் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்து மல்ஹோத்ரா, வழக்குரைஞராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலத்தில் அவருடைய அலுவலகத்தில் மோகனா சேர்ந்தார். முக்கியமான பல்வேறு சட்டப் பணிகளில் பங்கேற்றார்.
தொடர்ந்து, மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப. சிதம்பரம், அருண் ஜெட்லி, டி.ஆர். அந்தியார்ஜுனா உள்பட புகழ்பெற்ற பல சட்ட வல்லுநர்களுடன் இணைந்து மோகனா பணியாற்றியுள்ளார்.
1996-ல் பதிவு - வழக்குரைஞர் தேர்வில் (அட்வகேட் ஆன் ரெகார்ட்) தேர்ச்சி பெற்ற மோகனா - உச்ச நீதிமன்றம், தில்லி உயர்நீதிமன்றம், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்றவற்றில் வாதிடத் தொடங்கினார்.
அரசியலமைப்புச் சட்டம், ஊழல், போதைப்பொருள், குற்றவியல் சட்டம், சேவைச் சட்டம் தொடர்பான விவகாரங்களைக் கையாலும் இந்திய அரசின் வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.
சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் நடுநிலை அறிவுரையாளராகவும் ஆஜராகி, உச்ச நீதிமன்ற சட்டச் சேவைகள் குழுவிலும் சிறப்பாகப் பணியாற்றினார். 2015-ல் மோகனாவை மூத்த வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தின் முழுச் சிறப்பு அமர்வு நியமித்தது.
வாழ்க்கை முழுவதும் சட்டப் பணி மற்றும் நீதித் துறையில் பெண்களின் அதிக பிரதிநிதித்துவத்துக்காக வாதிட்டு வந்திருக்கும் மோகனாவை, இப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் கவுன்சிலிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறும் இரண்டாவது பெண்மணி வி. மோகனா. இதற்கு முன்னர் இவ்வாறு நீதிபதியான பெண்மணி இவரைப் பயிற்றுவித்த இந்து மல்ஹோத்ரா!
கோவையில் எளிய வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தை எட்டியுள்ள மோகனா முதல் தலைமுறை இளம் வழக்குரைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்!
From Coimbatore courtrooms to cusp of Supreme Court: The Inspiring Journey of V. Mohana
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.