அரசுப் பேருந்து எண்ம பலகையில் ‘டிவிகே’... பயணிகள் அதிர்ச்சி!
அரசுப் பேருந்து எண்ம பலகையில் டிவிகே பெயர் இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி...
திண்டுக்கல்லில் அரசுப் பேருந்து எண்ம பலகையில் தமிழக வெற்றிக் கழகத்தைக் குறிப்பிடும் ‘டிவிகே (TVK)’ பெயர் இருந்தால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து, அய்யலூர், எரியோடு, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, நிலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு அரசு நகரப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு, எரியோடை அடுத்த மலைப்பட்டி கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மகளிர் விடியல் பயணப் பேருந்து என்பதால் இதில் ஏராளமான பெண் பயணிகள் இருந்தனர்.
Advertisement
Advertisement
இந்தப் பேருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைை நிறுத்தத்தைக் கடந்து காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பேருந்திலிருந்த எண்மப் பெயர் பலகையில் தவெக கட்சியின் ஆங்கில எழுத்துக்களான டிவிகே என 3 எழுத்துக்கள் மட்டும் தெரிந்தது.
பேருந்தின் முன்பகுதியில் மட்டுமின்றி, பக்கவாட்டிலுள்ள பலகையிலும் டிவிகே என்ற எழுத்துக்கள் மட்டுமே தெரிந்தன. காட்டாஸ்பத்திரி நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், ஊர் பெயருக்கு பதிலாக டிவிகே என்ற எழுத்துக்கள் மட்டும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, டிவிகே எழுத்துகள் உடனடியாக மாற்றப்பட்டன.
இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் வி.ஜெயராமன் கூறுகையில், “அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் படம் மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு நகரப் பேருந்திலுள்ள எண்ம தகவல் பலகையில் கிராமத்தின் பெயருக்கு பதிலாக தவெக கட்சியின் பெயர் வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலும்கூட, கட்சியின் பெயர் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
டிவிகே என்ற பெயரை திட்டமிட்டே காட்சிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்” என்றார்.
இதுபற்றி அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டபோது மாலப்பட்டி என்ற பெயரே இடம் பெற்றிருக்கிறது.
அதனைப் பார்த்தே பயணிகளும் பேருந்தில் ஏறினர். சிறிது நேரத்தில் தான் எண்ம பலகையில், கிராமத்தின் பெயருக்கு மாற்றாக டிவிகே என்ற எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
ஓட்டுநர், நடத்துநரிடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். எனினும் இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தனர்.