மாணவர்கள் கவனத்துக்கு... தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!
புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரையில், பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான புதிய பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரையில், மாணவர்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஜூன் 4 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், 2026 - 27 கல்வியாண்டில் மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை, அவர்தம் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமுமின்றி, பள்ளிகளுக்குக் கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை பேருந்து நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.
Advertisement
Advertisement
மேலும் பள்ளி துவங்கும், முடியும் நேரம் வரை பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணித்திட போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிச் செல்லவும் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளனர்.