முகப்பு
தமிழ்நாடு

கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி கைது!

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில், பெண்ணின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

கவின். - (கோப்புப்படம்)
பகிர்:

நெல்லையை உலுக்கிய ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27). இவர் ஐடி நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இந்த ஆணவக்கொலை தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் கவினின் காதலியான சித்த மருத்துவர் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை எஸ்ஐ சரவணன் ஆகியோரை மாநகர போலீசார் கைது செய்தனர். கவின் மற்றும் சுபாஷினி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கொலை நடந்தது தெரியவந்தது. பின்னர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்தனர்.

Advertisement

Advertisement

விசாரணையை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் தந்தை மற்றும் மகன் இருவரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர்.

இந்த விசாரணையில் வழக்கில் புதிய திருப்பமாக சுர்ஜித்தின் பெரியம்மா மகனான கல்குவாரி உரிமையாளர் ஜெயபால் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கான தடயங்களை மறைக்கவும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்கவும் ஜெயபால் உதவியதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கில் சதித்திட்டத்தை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கினர்.

சுபாஷினி மற்றும் அவரது தாயாரும் பெண் எஸ்ஐயுமான கிருஷ்ணகுமாரி ஆகியோரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கொலையில் கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் 4-வது நபராக பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

போலீஸ் டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் சிபிசிஐடி எஸ்ஐக்கள் அடங்கிய தனிப்படையினர் இந்த வழக்கை தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பொறியாளர் ஆணவக் கொலைச் சம்பவத்தில், கொல்லப்பட்டவரின் காதலியின் தம்பி, தந்தை, தாய், உறவினர் என 4 கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

summary

The mother of the woman has been arrested in connection with the murder case of Kavin, an IT employee from Tirunelveli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.