தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!
ஆளுநரை இபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது பற்றி...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆரலேகரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் எம்.பி. ஆகியோர் ஆளுநரை இன்று சந்தித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக அதிமுகவினர் ஏற்கெனவே ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்திருந்தனர்.
Advertisement
Advertisement
தற்போது அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். குதிரை பேரம் நடப்பதாக அதிமுகவினர் ஏற்கெனவே குற்றம்சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
தவெக நடத்தும் குதிரை பேரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் அளித்த மனுவை ஆளுநரிடம் அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
முன்னதாக தனபால் எம்.பி., தனது எக்ஸ் பக்கத்தில், "தவெகவிற்கு தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில், அண்ணா திமுகவை உடைக்க நினைத்தும் முடியாத நிலையில், பதவியேற்ற உடனே ராஜிநாமா செய்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னணியை ஆராய வேண்டும்.
மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல்.
ஜனநாயகத்தை காக்க மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.