ரூ. 1,000 கோடி மோசடி! மதுரை இளைஞர் தற்கொலையா? கொலையா? தாயார் பரபரப்பு பேட்டி
மதுரை அருகே ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியது குறித்து...
மதுரை அருகே நடந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என இளைஞரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மேலூர் நடத்தப்பட்ட எஃப்க்யூஎல் மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ராசுவின் உறவினர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ராசு தற்கொலை செய்துகொண்டதாக என்னை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரின் உடலில் ரத்தக் காயங்களும் இருந்தன. அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரை அடித்துக் கொன்றுள்ளனர்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்தின் அருகே சென்ற யாரோ இருவர் பார்த்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காவல்துறையினர்தான் எங்களை அழைத்துச் சென்றனர்.
விலாவில் கல்லால் அடித்தாற்போல காயம், கால்களில் காயம், காதுகளிலும் ரத்தம் வந்தது. தூக்கிட்டுக் கொண்டவர்களுக்கு இதுபோன்று எப்படி காயமாகும்? அவரை அடித்துக் கொன்றுவிட்டுத்தான், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். அவரை கொலை செய்துவிட்டார்கள்.
அவர் பணத்துக்காக பயந்து தற்கொலை செய்துகொள்ளவில்லை. நாங்கள் புகார் அளித்துள்ளோம். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மதுரை மேலூர், அலங்காநல்லூர் பகுதிகளில் எஃப்க்யூஎல் செயலி வாயிலாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என நடைபெற்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் பணத்தை முதலீடு செய்து இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ரூ. 1,000 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, இதுவரையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Online Scam: Suicide or Murder? Deceased Youth's Mother Raises Suspicions
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.