மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! சென்னை தனியார் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை
மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த நாளில் மாணவர் தற்கொலை முயன்ற சம்பவத்தால் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலைக்கு முயன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நினைவு திரும்பியதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை என்னவென்று தெரிய வரும் என காவல்துறை கருதுகிறது.
அடுத்தடுத்து கல்லூரியில் இரண்டு பேர் மாடியிலிருந்து குதித்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், மாணவர்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை அறிவித்துள்ளதாகக் கூறியிருக்கிறது.
Advertisement
Advertisement
இது குறித்து வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த கல்லூரியிலும் மாணவர்களின் பெற்றோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் பொறியியல் கல்லூரியில், பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த டேவிட் என்பவரின் மகள் ஷெரின்(19), செயற்கை நுண்ணறிவு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், ஷெரீன் புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் அவரது வகுப்பறை உள்ள 5 -ஆவது மாடியில் அமா்ந்து இருந்ததாக தெரிகிறது.
காதல் அல்லது படிப்பு தொடர்பான விவகாரத்தால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் ஷெரீன் திடீரென 5-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த ஷெரீன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சசிதரன் (19) என்ற மாணவர் நேற்று மதியம் கல்லூரி வளாகத்தில் உள்ள 3வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரை மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Student suicide; another attempts suicide in engg college
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.