ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: நீதி கிடைப்பதை உறுதிசெய்ய மாதர் சங்கம் வலியுறுத்தல்
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியது குறித்து...
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் உண்மை முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகி, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ விஜி சரவணனுக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் காவல் நிலையத்தில் கூறியபோது, வழக்குப்பதிவின்போது எம்எல்ஏ-வின் பெயரைச் சேர்க்கக் கூடாது என மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணைக்குத் தன்னை அழைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சம்பவத்துக்கும் தவெக எம்எல்ஏ-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பாதிக்கப்பட்ட பெண்ணிடமே விசாரணை நடத்தப்படவில்லை. அப்படியெனில், எந்த அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது? அவரது வாக்குமூலம் ஏதுமில்லாமல் அவரது புகாரின் உண்மைத்தன்மையை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள்?
இந்த வழக்கில் எம்எல்ஏ விஜி சரவணனுக்கு தொடர்பில்லை என்ற முடிவை எட்டுவதற்கு முன், விசாரணை முழுமையாக நடத்தப்பட்டதா, நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் நடத்தப்பட்டதா என்றும் உறுதிசெய்யப்பட வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதற்காக, அவரை விசாரணையிலிருந்து விடுவிப்பதை ஏற்க முடியாது.
ஆகையால், இந்த விவகாரத்தில் இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையை வெளிப்படையாக விளக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை முறையாகப் பரிசீலித்து, தேவைப்படுமாயின் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குற்றச்சாட்டுகளில் சமரசமோ அரசியல் செல்வாக்கோ அதிகார அழுத்தமோ இடமளிக்கக் கூடாது.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பக்கம் அரசு நிற்காமல்ம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கமே அரசு நிற்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
AIDWA urges ensuring justice in the sexual assault case involving a female TVK functionary from Srivaikuntam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.