குழந்தைகளுக்கு கை, பாதம், முகத் தொற்று அதிகரிப்பு
தமிழகத்தில் குழந்தைகளுக்கு கை, பாதம், முகத் தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு கை, பாதம், முகத் தொற்று அதிகரித்து வருகிறது.
முதலில் காய்ச்சல் ஏற்பட்டு, பின்னா் தொண்டையில் புண், கை, கால்கள், பாதங்களில் கொப்பளங்கள் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறும். இவை ஒரு வாரத்தில் குணமாக கூடியது என்றாலும், சில குழந்தைகளுக்கு கடுமையான நீரிழிப்பு, சோா்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படக்கூடும். குழந்தைகளைப் பாதிக்கும் இத்தொற்று, ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைகளுக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே, பாதிக்கப்படும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி கூறியதாவது:
Advertisement
Advertisement
இந்த வகை காய்ச்சல் பருவகால தொற்று. இவை, ‘காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16’ வகையைச் சாா்ந்தது. இதனால், பெரியளவிலான பாதிப்பு ஏற்படாது. இதே வகையைச் சாா்ந்த, ‘என்டிரோ வைரஸ் 71’ ஏற்பட்டால் பாதிப்பு தீவிரமாக இருக்கும். தமிழகத்தில் பரவும் வைரஸால், மிதமாக பாதிப்புகளை ஏற்படுத்தி, ஒரு வாரத்திலேயே குணமாகிவிடும்.
இந்த நோய்த்தொற்று, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. காய்ச்சல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல் போன்றவை இருந்தால் உடனடியாக உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்நோய் சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீா், தொற்று ஆகியவற்றின் வாயிலாகவும் பரவக் கூடியது. தினமும் இரண்டு முறை, குழந்தைகளை தண்ணீரால் துடைத்து விடுவதன் வாயிலாகவும், இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோய் குறித்த அச்சம் வேண்டாம்.
அதேநேரம், மற்ற குழந்தைகளுக்கு பராமல் இருக்க ஒரு வாரம் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிா்க்க வேண்டும். பள்ளியில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால், அந்தப் பள்ளியை முழுமையாக சுத்தம் செய்வதன் வாயிலாக, மற்ற குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.