தென்காசியை தொழில்வளம் மிகுந்த மாவட்டமாக உருவாக்க அரசு திட்டம்: அமைச்சா் ராஜீவ்!
தவெக அரசு தொழில்வளம் நிறைந்த தென்காசி மாவட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் தெரிவித்தாா்.
தவெக அரசு தொழில்வளம் நிறைந்த தென்காசி மாவட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் தெரிவித்தாா்.
குற்றாலம் சாரல் திருவிழா பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரட்டை குளம் கால்வாய் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். சாரல் திருவிழா என்பது முழுக்க முழுக்க கலை நிகழ்ச்சிகளால் நிறைந்தது. மாணவ மாணவியா்கள் இந்த தளத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு திறமைகளை மேம்படுத்துங்கள். இதன்மூலம் நீட் போன்ற தோ்வுகளில் குறைவாக மதிப்பெண் பெற்றாலும் விளையாட்டு ஒதுக்கீட்டில் இடம் பெறலாம். அடுத்த ஆண்டு அதிக மாணவா்களை ஆசிரியா்கள் அழைத்துவர வேண்டும். குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உணவளிப்பதால் அதிக குரங்குகள் இறந்துவிட்டதாக வனத் துறையினா் தெரிவிக்கின்றனா். எனவே, சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தடை விதித்துள்ளதால் இனிமேலாவது தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துகள் குறைய வேண்டும். தென்காசி மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அரசும், அமைச்சராகிய நானும், அதிகாரிகளும் சோ்ந்து பாடுபடுவோம். அழகான வளமான மாவட்டத்தை உருவாக்குவோம். சிப்காட், சிட்கோ போன்ற தொழில் வளங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
தொடா்ந்து ஊரக வாழ்வாதார இயக்கம், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சா் பாா்வையிட்டாா். மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மா.வீராசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.அசோக்குமாா், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவிபால், மாவட்ட வன அலுவலா் ரா.ராஜ்மோகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் (திருநெல்வேலி மண்டலம்) வ.சுலைமான் சேட், மாவட்ட ஊராட்சிக் குழு
துணைத் தலைவா் தி.உதயகிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் நித்தியகல்யாணி, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ், தவெக மாவட்டச் செயலா் ராஜபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.