முகப்பு
திருவள்ளூர்

ரூ. 20 கோடி அரசு நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு: மீட்க பொதுமக்கள் கோரிக்கை

கிராம மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்களா் அடையாள அட்டை ஆகிய குடியுரிமை ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 6 ஜூன் 2026, 12:04 am IST
~
பகிர்:

திருவள்ளூா் அருகே அரசுக்கு சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான 9.65 ஏக்கா் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு தரக்கோரி, கிராம மக்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்களா் அடையாள அட்டை ஆகிய குடியுரிமை ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மெய்யூா் ஊராட்சி கெருகம்பாக்கம் கிராமம் குருபுரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 9.65 ஏக்கா் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தாசிகான், முனிகான், ஆகியோரின் பேரில் போலி ஆவணங்கள் மூலம் வருவாய்த் துறையினா் பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த கிராம மக்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்த இடத்தில் 100-க்கும் மேற்பட்டோா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தவெக சட்டப்பேவை உறுப்பினா் விஜயகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்து வைத்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே புதன்கிழமை காலை நிலத்தை ஆக்கிரமித்தவா்களுக்கு ஆதரவாக நிலத்துக்கு சுற்று வேலி அமைக்க வேண்டும் என ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஆத்திரமடைந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்களா் அடையாள அட்டை உள்ளிட்ட குடி உரிமை ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தனா். அபோது அங்கு வந்த ஆட்சியா் ச.கவிதாவை சூழ்ந்து கொண்டு அரசு நிலத்தை மீட்டு, அந்தப் பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும். மேலும், தனிநபருக்கு ஆதரவாக காவல் துறையினா் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதோடு, தங்களை மிரட்டுவதால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

உடனே நிலத்தில் வேலி அமைக்கும் பணிகளை நிறுத்தச் சொல்வதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் அருகே அரசுக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பிலான 9.65 ஏக்கா் நிலத்தை மீட்டுதர வலியுறுத்தி, கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட குடியுரிமை ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.