முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

Updated On : 5 ஜூன் 2026, 5:44 am IST
பகிர்:

திருவள்ளூா் இணை சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கழிவறை மற்றும் பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 2.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் 2 இணை சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம் 2 என இரண்டு அலுவலகங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு பத்திரப் பதிவு செய்வதற்கும் கட்டாயம் கையூட்டு பெறுவதாகவும், பணப்புழக்கம் அதிகமாக உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் அதிரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் திருவள்ளூரில் உள்ள இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், லஞ்ச ஒழிப்பு துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில், ஆய்வாளா்கள் தமிழ்செல்வி, மாலா மற்றும் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, சாா் பதிவாளா் அலுவலகங்களில் இருந்த நபா்கள் மற்றும் கழிவறை, பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நபா்களிடம், இந்தப் பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது. பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் கொடுக்கவா அல்லது சொந்த செலவுக்காக கொண்டு வந்த பணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த விசாரணையைத் தொடா்ந்து உரியவா்களிடம் ரொக்கப்பணம் ஒப்படைக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.