"ரூபாய் மதிப்பு சரிவால் நிச்சயமற்ற சூழலில் ஏற்றுமதியாளர்கள்'
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.
புது தில்லி: ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வருவதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் கணேஷ் குமார் குப்தா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் உள்ள இறக்குமதியாளர்கள் தங்களது ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யும்படி கேட்கத் தொடங்கியுள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் ஏற்றுமதி பொருளுக்கான சரியான விலையை நிர்ணயிக்க முடியாமல் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர்.
ரூபாய் மதிப்பில் தற்போது காணப்பட்டு வரும் வீழ்ச்சியின் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் உறுதிப்பாடட்ற நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளைய ரூபாய் மதிப்பு எப்படி இருக்குமோ என்ற யூகிக்க முடியாத நிலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
ரூபாய் மதிப்பு சரிவால் 20 சதவீத ஏற்றுமதியாளர்கள் மட்டுமே தற்போது லாபம் ஈட்டி வருகின்றனர். எஞ்சியுள்ள 80 சதவீத ஏற்றுமதியாளர்கள் பலன் ஏதும் கிடைக்காமலேயே உள்ளனர்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான அடித்தளம் இந்தியாவிடம் உள்ளது. இதனால், வரும் நாள்களில் ரூபாய் மதிப்பானது 67-68-இல் நிலை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
நாட்டின் ஏற்றுமதி கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 10 சதவீதம் வளர்ச்சி கண்டு 30,300 கோடி டாலராக இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.