வங்கித் துறையில் களமிறங்க எல்ஐசி திட்டம்?
ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் எல்ஐசி நிறுவனம் விரைவில் வங்கி துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம் எல்ஐசி நிறுவனம் விரைவில் வங்கி துறையில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வாராக் கடன் பிரச்னையில் சிக்கி தத்தளித்து வரும் ஐடிபிஐ வங்கியை அதிலிருந்து மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 80.96 சதவீத பங்குகளையும், அதற்கு அடுத்தபடியாக எல்ஐசி நிறுவனம் 10.82 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன.
வாராக் கடன் பிரச்னை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் எல்ஐசி அதற்கான முயற்சிகளில் களமிறங்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், ஐடிபிஐ வங்கியில் 50 சதவீதத்துக்கும் மேலான பங்குகளை கையகப்படுத்துவது குறித்து எல்ஐசி இன்னும் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. எனினும், அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள பங்கு மூலதனத்தை 50 சதவீதத்துக்கும் கீழாக குறைக்கும் வழிமுறைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது மத்திய அரசின் பங்கு மூலதனத்தை எல்ஐசி கையகப்படுத்துவதன் மூலம் ஐடிபிஐ வங்கியை அது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.