முகப்பு
வணிகம்

ஒரு மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு! டிரம்ப்பின் போர் உரை எதிரொலி!!

ஈரானுக்கு எதிரான போர் தொடரும் என்ற டிரம்ப்பின் உரை எதிரொலியாக பங்குச்சந்தையில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 5:43 AM
பங்குச்சந்தை.
பகிர்:

ஈரானுக்கு எதிரான போர் தொடரும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உரை எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.45 மணி நிலவரப்படி, 1,309 புள்ளிகள் சரிந்து 71,820 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 417.35 புள்ளிகள் சரிந்து 22,262.05 ஆக வர்த்தகமாகின.

சென்செக்ஸில் டிசிஎஸ், ஹெச்சிஎல் பங்குகளைத் தவிர்த்து, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுஸுகி, ஐடிசி உள்ளிட்ட அனைத்துப் பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகின.

இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணியளவில் உரையாற்றிய அதிபர் டிரம்ப் நாட்டு மக்களிடம் ஈரானுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது. புதன்கிழமை சந்தை முடிவில், பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4,22,01,433.48 கோடியாக இருந்தது.

ஆனால், வியாழக்கிழமை வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், 10 மணிக்குள் அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 4,11,94,176 கோடியாக சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ. 10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உலக வர்த்தகத்தில் மூன்று இரண்டு பங்கு வணிகத்தை தீர்மானிக்கக் கூடிய நீர்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. மேலும், இதனை எதிர்த்து ஈரானின் எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்க்ள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது.

இதனால், இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அதுமட்டுமின்றி ஈரானுக்கு எதிரான போர் எப்போது முடியும் என்று அதிபர் டிரம்ப் இதுவரை தெளிவுபடுத்தவிலை. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளிலும் தொடர்ந்து வருகிறது.

ஒரு பீப்பாய் 100 டாலர்களாக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் 5 சதவிகிதம் உயர்ந்து 105 டாலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா ரூபாய் மீதான தாக்கம் உள்ளிட்டவைகளால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாதத்தின் முதல்நாளாக நேற்று மட்டும் ரூ. 8,331 கோடி பங்குகள் விற்பனை செய்தனர். 

summary

Domestic equity markets extended their sharp decline on Tuesday, with benchmark indices falling over 2% in early trade as a spike in crude oil prices, escalating tensions in West Asia and sustained foreign investor outflows weighed heavily on sentiment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.