டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே
2025-26 நிதியாண்டில் மொத்தம் 2,14,951 டிராக்டரை விற்பனை செய்து 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
புதுதில்லி: டாபே நிறுவனம், கடந்த நிதியாண்டில் விற்பனையான 1,74,785 டிராக்டர்களுடன் ஒப்பிடுகையில், 2025-26 நிதியாண்டில் மொத்தம் 2,14,951 டிராக்டரை விற்பனை செய்து, 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
மார்ச் 2026ல், 37.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம், நிதியாண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
நிறுவனத்தின் 'ஃபெர்குசன்' மற்றும் 'ஐஷர்' ஆகிய இரண்டு டிராக்டர்கள் அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்ததன் மூலம், டிராக்டர் வரலாற்றிலேயே மிக உயர்ந்த உள்நாட்டு விற்பனை அளவை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.
Advertisement
செயல்பாடுகள் குறித்துப் பேசிய நிறுவனத்தின் துணைத் தலைவர் திருமதி லக்ஷ்மி வேணு, டிராக்டர் சந்தைக்கும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் இது ஒரு சாதகமான ஆண்டாக அமைந்தது. சாதகமான பருவமழை, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கான அரசின் நடவடிக்கையும் விவசாயத் துறைக்குக் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளித்துள்ளது.
இந்த ஆண்டு, சிறு விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் வசதி கிடைத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. அதை வேளையில் விவசாயிகள் பலர் முதன்முறையாக இந்த இயந்திரமயமாக்கல் சூழலுக்குள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இது நாடு முழுவதும் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும், விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்துவதிலும் நீண்ட கால அடிப்படையில் பெரும் பங்காற்றும்.
இந்த துறையில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களின் மீது, நாங்கள் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகிறோம், எங்களின் இந்தக் கவனமே, இந்த ஆண்டின் சந்தையில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட உதவியுள்ளது.
தற்போதைய அரசியல் பதற்றங்கள் மற்றும் போரினால் ஏற்படும் விநியோகத் தடைகள் ஆகியவற்றால் உருவாகும் உலகளாவிய நிச்சயமற்ற நிலை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை விவசாயிகளை தொடர்ந்து பாதித்து வந்தாலும், இந்திய விவசாயத்தின் அடிப்படை அம்சங்கள் தொடர்ந்து வலுவாகவே இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.