சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!
சூரிய மின் நிலையங்களை அமைப்பதில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக, கெயில் இந்தியா அறிவித்துள்ளது.
புதுதில்லி: சூரிய ஆற்றலை நோக்கிய தனது முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மொத்தம் 700 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக, பொதுத்துறை எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்தின் 'பாடா' பகுதியில் அமைந்துள்ள தனது பெட்ரோ கெமிக்கல் ஆலையில், நிறுவனத்தின் சொந்த மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, ஜான்சியில் உள்ள டஸ்கோ சூரிய மின் பூங்காவில் 600 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டத்தையும், அதனுடன் இணைந்து 550 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பையும் உருவாக்கவுள்ளதாக கெயில் தெரிவித்தது.
இதற்கிடையில், மகாராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில், 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டத்தையும், அதனுடன் 22 மெகாவாட் திறன் கொண்ட சேமிப்பு அமைப்பையும் அமைக்க உள்ளது.
Advertisement
திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் தற்போதுள்ள 147 மெகாவாட்டிலிருந்து கணிசமாக உயர்ந்து 1,000 மெகாவாட்டைத் கடக்கும் என்றார் கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபக் குப்தா.