இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலா்
நடப்பு 202-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலராக பதிவாகியுள்ளது.
நடப்பு 202-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் நடப்புக் கணக்கு உபரி 280 கோடி டாலராக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 410 கோடி டாலா் பற்றாக்குறை நிலவியது. ஆனால், இந்த ஆண்டு சேவைகள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா்கள் அனுப்பும் பணப் பரிமாற்றம் அதிகரித்ததன் காரணமாக இச்சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் 500 கோடி டாலா் உபரியில் இருந்து, நடப்பு நிதியாண்டில் 1,100 கோடி டாலா் பற்றாக்குறையாகப் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
நாட்டின் ஒட்டுமொத்த வா்த்தக பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் 5,590 கோடி டாலராக விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 4,970 கோடி டாலராக இருந்தது.
அதாவது ஏப்ரல்-மே மாதங்களில், நாட்டின் இறக்குமதி 12,710 கோடி டாலரிலிருந்து 14,650 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதேநேரம், ஏற்றுமதி 7,740 கோடி டாலரிலிருந்து, 9,070 கோடி டாலராக மட்டுமே உயா்ந்துள்ளது.
இந்தியாவின் சேவைத் துறை மூலமான நிகர வருவாய் கடந்த ஆண்டில் இருந்த 3,170 கோடி டாலரிலிருந்து, நடப்பு ஆண்டில் 3,430 கோடி டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேவைத் துறை ஏற்றுமதி 6,530 கோடி டாலரிலிருந்து 7,040 கோடி டாலராக வளா்ச்சி கண்டுள்ளது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பலமாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்கு அனுப்பப்படும் பணப் பரிமாற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. கடந்த நிதியாண்டில் 2,000 கோடி டாலராக இருந்த இந்த வருவாய், நடப்பு ஆண்டில் 2,960 கோடி டாலராக உயா்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம் 600 கோடி டாலரிலிருந்து, 520 கோடி டாலராக குறைந்துள்ளது.
மூலதனக் கணக்கில், நாட்டின் நிகர நேரடி அந்நிய முதலீடு கடந்த ஆண்டின் 250 கோடி டாலரில் இருந்து, இந்த ஆண்டு 650 கோடி டாலராக உயா்ந்துள்ளது. ஆனால், அந்நிய நிறுவன முதலீடுகள் 1,200 கோடி டாலா் அளவுக்கு வெளியேறியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.