டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.
மும்பை: ஈரானுடனான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தன. இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான போக்கு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு உதவின என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் எண்ணெய் துறையைக் கைப்பற்றுவதாக மிரட்டிய சில மணிநேரங்களிலேயே அந்த நாட்டின் மீதான ராணுவத் தாக்குதல் திட்டத்தை டிரம்ப் ரத்து செய்தார். அத்துடன், ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகலாம் என்றார்.
Advertisement
Advertisement
டிரம்பின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்தது. குறிப்பாக, கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 4.25 சதவீதம் சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 86.54 டாலராக வர்த்தகமானது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு முந்தைய நாள் முடிவை விட 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிலைபெறுவதற்கு முன், ரூபாயின் மதிப்பு ரூ. 95.40 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி பிறகு ரூ. 94.95 முதல் ரூ. 95.53 வரையிலான வரம்பிற்குள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகள் சரிந்து ரூ. 95.85 ஆக நிலைபெற்றது.