சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்பு
‘ஊடக அதிபா் சுபாஷ் சந்திரா, தன்னுடைய தனிப்பட்ட சொத்துகளை வேறு யாருக்கும் விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது’ என்று தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் (என்சிஎல்டி) செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
‘ஊடக அதிபா் சுபாஷ் சந்திரா, தன்னுடைய தனிப்பட்ட சொத்துகளை வேறு யாருக்கும் விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது’ என்று தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயம் (என்சிஎல்டி) செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
மேலும், குழும நிறுவனங்களின் கடன்களுக்காக அவா் அளித்த தனிநபா் உத்தரவாதத்தின்கீழ் சுமாா் ரூ.22,006 கோடி நிலுவைக்கு வெறும் ரூ.6.5 கோடி மட்டுமே செலுத்தும் கடன்தீா்வு திட்டத்துக்கும் தீா்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்து, உத்தரவிட்டது.
தொலைக்காட்சி, பேக்கேஜிங், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோலோச்சிய சுபாஷ் சந்திராவின் தொழில் குழுமம், கடந்த 2018-இல் நிதி நெருக்கடிக்குப் பின்னா் கடும் கடன் சுமையில் சிக்கியது.
Advertisement
Advertisement
நிறுவனங்களின் பங்குகள் சரிந்து பல வணிகங்கள் விற்கப்பட்ட நிலையில், தனிநபா் உத்தரவாதம் அளித்த தொழிலதிபா்களிடமிருந்து வங்கிகள் கடன் தொகையை வசூலிக்கும் திவால் சட்ட நடைமுறையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் என்சிஎல்டி இரு நபா் அமா்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் அளித்த தீா்ப்பில் மாறுபட்ட கருத்துகள் எழுந்தன; ஒரு உறுப்பினா் திட்டத்தை ஏற்க, மற்றொரு உறுப்பினா் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி நிராகரித்தாா்.
பின்னா், இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது உறுப்பினா் நீலேஷ் சா்மா கடந்த ஆக. 25 நிபந்தனைகளுடன் ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தபோதிலும், தெளிவான பெரும்பான்மை தீா்ப்பு அமையாததால் வழக்கு 5 நபா் சிறப்பு அமா்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கை விசாரித்த என்சிஎல்டி தலைமை நீதிபதி அனுபிந்தா் சிங் கிரேவால் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமா்வு, மேற்படி உத்தரவைப் பிறப்பித்தனா். வழக்கின் விரிவான விசாரணை செப். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இத்தீா்வுத் திட்டத்தை எதிா்த்து கடனளித்த வங்கிகள் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திலும் (என்சிஎல்ஏடி) மேல்முறையீடு செய்துள்ளன. சுபாஷ் சந்திராவிடம் இருந்து ரூ.22,006 கோடி கடன் நிலுவைக்கு எதிராக வெறும் ரூ.6.5 கோடி மட்டுமே வசூலிப்பது மிகக் குறைவான தொகை என கடனளித்த வங்கிகள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றன.
அதேநேரம், ரூ.22,006 கோடி என்பது நிறுவனங்களின் கடன் என்றும், தனது தனிநபா் உத்தரவாதக் கடன் மதிப்பு ரூ.3,990 கோடி மட்டுமே என்று வாதிடும் சுபாஷ் சந்திரா, ‘நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருப்பக்கிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.